ஒரு பிள்ளையின் வாழ்நாள் முழுவதுமான கல்விக்கு அத்திவாரமாகவும் அடிப்படையாகவும் அமைவது ஆரம்பக் கல்வியேயாகும். இதனாலேதான் ஆரம்பக்கல்வி இன்றைய உலகில் அதிமுக்கியத்துவம் பெறுகிறது. ஆரம்பக் கல்வி என்பது முறையாக திட்டமிடப்பட்ட கலைத்திட்டத்திற்கேற்ப 5 வயது தொடக்கம் 10 வயதுக்குட்பட்ட பிள்ளைகளுக்கு வழங்கப்படுகின்ற கல்வியாகும். அதாவது முறைசார்கல்வியின் 5 வருடங்கள்(தரம்1-5வரை)வழங்கப்படுகின்ற கல்வியாகும். அறிவு விருத்திப் படிகளில் முதன்மையாகக் கருதப்படுவது மொழி விருத்தியாகும்.இம்மொழியானது வீட்டிலிருந்து ஆரம்பிக்கிறது. நல்ல வீட்டுச் சூழலில் அது வளம் பெறுகிறது. இதற்கு பெற்றோரின் பங்களிப்பு மிகவும் அவசியம். "சிந்திப்பதற்கும் மனிதனை இயக்குவதற்கும் முக்கியமான ஒரு கருவி மொழியாக உள்ளது” என்று புறூனர் என்ற உளவியலாளர் குறிப்பிடுகின்றார். சுயமாக சிந்திக்கும் ஆற்றல் ,சுயமாக ஆக்கங்களில் ஈடுபடும் ஆற்றல் ,எனும் ஆரம்பக்கல்வி நோக்கங்களை அடைவதற்கு மொழி விருத்தி முக்கிய பங்கு வகிக்கிறது.

பெற்றோரின் சிறந்த பேச்சு, கதை கூறல், பிள்ளைகளின் கதைகளை செவிமடுத்தல், படம் பார்த்து கதை சொல்லுதல், வினாக்களுக்கு விடையளித்தல், கீறுவதற்கும் வரைவதற்கும் இடமளித்தல், வேறுசூழல் களுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்லுதல், விளையாட்டுப் பொருட்களை வாங்கிக் கொடுத்தல் போன்றவற்றின் மூலமாக பிள்ளையின் படைப்பாற்றல், சிந்தனையாற்றல், கற்பனையாற்றல், பிரச்சினைகளை விடுவிக்கும் ஆற்றல் போன்ற திறன்கள் விருத்தியடைகின்றன.
எனவே பிள்ளைகளை வாசிப்பு விடயத்தில் ஈடுபடுத்த வேண்டும். வாசிப்பானது ஒருவருக்கு எவ்வாறு பயனுள்ளது. மொழியில் வாசிப்பு முக்கிய இடத்தை வகிக்கிறது.

பாடசாலைக் கலைத்திட்டத்தில் மொழித்திறன்களை அதிகரிப்பதற்குரிய. வழிவகைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதனை நோக்கும் போது முதலாவது தொடர்பாடல் தேர்ச்சிகள். எழுத்தறிவு, எண்ணறிவு, சித்திரஅறிவு, தகவல் தொழில்நுட்ப அறிவு, ஆகிய. நான்கு வகை துணைத் தொகுதிகளாக தொடர்பாடல் தேர்ச்சிகள் வகுக்கப்பட்டுள்ளன.

இவற்றில் கவனமாக செவிமடுத்தல், தெளிவாகப் பேசுதல், கருத்தறிய வாசித்தல், சரியாகவும் செம்மையாகவும் எழுதுதல், பயன் தரும் கருத்துப் பரிமாற்றம் என்பன தொடர்பாடல் தேர்ச்சியினூடாக முக்கியத்துவம் பெற்றுள்ளன. எனவேதான் கல்வித்துறையில் குறிப்பாக ஆரம்பக் கல்விப்புலத்தில் வாசிப்பின் முக்கியத்துவம் உணரப்பட்டுள்ளது.

மௌனமாக வாசித்தல், உரத்து வாசித்தல், என்னும் சொற்கள் கற்றல் கற்பித்தலில் மொழிப்பாடத்தில் மிகவும் முக்கியத்துவம் பெற்று விளங்குகின்றன. கேட்டல், பேச்சு, வாசிப்பு, எழுத்து என்பன மொழியின் அடிப்படைத் திறன்களாகும். இவற்றில் கேட்டல், பேச்சு என்பவற்றை பிள்ளையானது பாடசாலைக்கு வருவதற்கு முன்னே கற்றுக் கொள்கின்றது. வாசிப்பு, எழுத்து இரண்டையும் பிள்ளையானது பாடசாலையில் கற்றுக் கொள்கின்றது.

தகவல்களை பெற்றுக் கொள்வதற்காக வாசித்தல், பொழுது போக்கிற்காக வாசித்தல் என்றெல்லாம் ஒருவரின் நாளாந்த வாழ்க்கையில் வாசிப்பின் பயன் முக்கியத்துவம் பெறுகிறது. வாசிப்பானது கற்கின்ற ஒரு வழிமுறை. வாசிப்பின் மூலம் ஒருவன் (மாணவன்) கற்றுக் கொள்கின்றான். அறிவைப் பெற்றுக் கொள்கின்றான். அவனது விளக்கம் விருத்தியடைகிறது. இவ்விருத்தியானது பிள்ளையின் புத்திசார் விருத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது. தானாகவே கற்று முன்னேறிச் செல்வதற்கான இயலுமையை வாசிப்பானது அவனுக்கு பெற்றுக் கொடுக்கின்றது.
வாசிப்பானது புதிய. அறிவைப் பெற்று அனுபவத்தை விரிவாக்கிக் கொள்ள உதவுகிறது. மற்றைய சமயத்தவர்களின் கலாசார விழுமியங்களை அறிந்து இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வைப் பெறுவதற்கும் இன ஒற்றுமையுடன் வாழ்வதற்கும் வாசிப்பானது முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது.
ஆரம்பப் பருவத்தில் வாசிப்பை விருத்தி செய்யத் தவறினால் மாணவர் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியேற்படும்.

பாடங்களை கற்க முடியாமை, பரீட்சைக்கு விடையளிக்க முடியாமை, கல்வியில் பின்தங்குதல், உளரீதியான சிக்கல்கள் போன்றன ஏற்பட்டு பாடசாலைக் கல்வியில் வெறுப்பு ஏற்படும். எனவே வாசிப்பை கட்டாயப்படுத்த வேண்டிய தேவை பெற்றோருக்குண்டு.

வாசிப்பானது ஒரு பிள்ளையின் ஆரம்ப சிறுபராயத்திலிருந்து உருவாக வேண்டும். இன்றைய நவீன உலகில் வாசிப்புத்திறன் அருகி வருகின்றது. இதனால் பொது அறிவுத்திறனானது மிகவும் குறைவான மட்டத்தில் காணப்படுகிறது. இது வாசிப்புத்திறனில் ஏற்பட்டுள்ள. பின்னடைவைக் காட்டுகின்றது.

ஸ்மாட்போன், கணனி பாவனை, தொலைக்காட்சி நிழ்ச்சிகள் காரணமாக இன்று நூல்ளையும் பத்திரிகைகளையும் வாசிப்பதிலிருந்து. அதிகமானோர் தவிர்த்து வருகின்றனர். இந்த இலத்திரனியல் சாதனங்கள் வாசிப்புக்கு போட்டியாக இருக்கின்றன. மேலும் முகநூல்களில் செய்திகளை, தகவல்களை பதிவிடும் அதிகமானோர் தமிழ் இலக்கணப் பிழைகளுடனும் எழுத்துப் பிழைகளுடனும் எழுதுவதாக பலர் குறை கூறுகின்றனர். இதற்கு காரணம் வாசிப்பு அறிவின்மை ஆகும்.

வாசிக்கும் சமூகத்தை சிறுவர்கள் மத்தியில் உருவாக்குவதற்கு பாடசாலையில் ஆரம்பப் பிரிவு மாணவர்கள் பயிற்றுவிக்கப்பட வேண்டும். கவிதை, கதை, அறிவித்தல், அறிவுறுத்தல்கள், குறியீடுகள், நேர அட்டவணைகள் போன்றவற்றை வாசிக்க வைத்தல் ஆசிரியர்களின் பொறுப்பாகும். சுயசரிதை, கற்பனைக் கட்டுரை, வருணனைக் கட்டுரை, விமர்சனக் கட்டுரை, சிறுகதை, உரையாடல் போன்றவற்றை ஆசிரியர் வாசித்து காட்டி மாணவரை வாசிக்க வைத்து அதன்படியே எழுதப் பழக்க வேண்டும்.

சமய நூல்களை தினமும் வாசிக்க வேண்டும். இதற்கு சிறுவயதிலிருந்து பிள்ளைகளுக்கு பயிற்சியளிக்க வேண்டும். கல்வி மூலம் நற்பண்புள்ள பண்புசார் விருத்தியுள்ள பிள்ளை உருவாக்க வேண்டும் .

வாசிப்பின் தவறான பழக்கங்கள் வருமாறு:

நிறுத்தக் குறிகளைக் கவனிக்காமை, 
வாசிக்கும் விடயத்தின் கருத்தில் கவனம் செலுத்தாமை, 
சொற்களை கருத்தற்ற முறையில் வாசித்தல், 
முதலாம் எழுத்தைக் கண்டவுடன் பிழையாக வாசித்தல்.

இந்த தவறான பழக்கங்களை திருத்தி சரியாக வாசிக்க பழக்க வேண்டும். வாசிக்கும் சமூகத்தினை உருவாக்க ஆரம்பத்திலிருந்தே முயற்சிக்க வேண்டும்.

இஸ்மாயில் ஸூஸைன்தீன் (BEd)
நன்றி தினகரன்